செவ்வாய், 23 ஜூன், 2015

சாப்பாடு - பெரும்பாடு

உயிர்வாழ அத்தியாவசியத் தேவையான உணவை யாரும் இங்கே வெறுப்பதில்லை. ஆனாலும் விவசாயியை நாம் மனதளவில் உயர்வாக நினைத்தாலும், சமூக அந்தஸ்து என்று வரும்போது குறைத்தே மதிப்பிடுகிறோம். காரணம் சாதாரண விவசாயியின் தோற்றமும் அவர் சம்பாதனையும் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தே இருக்கிறது.

வேலை சார்ந்து உருவான இந்திய சமூகக் கட்டமைப்பை "புதுமை" பேசுகிறேன் என்று சொல்லி அதன் அடிவேரில் அமிலத்தை ஊற்றியவர்கள், இறந்தபின்னும், தங்கள் வாரிசாக சில அமில ஆலைகளை உருவாக்கிவிட்டு சென்றுவிட்டனர். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து எனும் இவைதான் அடிப்படை தொழில்களாக பாவிக்கப்பட்டன. அதன் பொருட்டே சமூக கட்டமைப்பும் உருவானது.

இன்று எல்லோருக்கும் கல்வி என்கிற பெயரில் குப்பைத் தகவல்களை மட்டும் குழந்தைகளின் மூளையில் நிரப்பும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க்கைக்கல்வி என்றால் என்ன, நடைமுறை அறிவு என்றால் என்ன என்று சிறு துளி அளவு கூட மாணவர்களுக்கு..., ஏன், இன்று பெருநிறுவனங்களில் வேலை செய்து பெரிதாக பணம் பண்ணுகிறோம் என்று பீத்திக்கொள்பவர்களுக்குக் கூடத்தெரியாது.

சம்பாதிக்க மட்டுமே அறிவு இங்கே தரப்படுகிறது. அது பாதி அறிவுதான்.செலவு செய்வது எப்படி? எந்தப் பொருளை எந்த இடத்தில, எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இன்றி, சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத மலட்டு சமுதாயத்தை உருவாக்கிய கல்வியைத்தான் இன்று எல்லோரும் நாடிச்சென்று, நடவு செய்த பூமியை விற்று, ஏமாந்து, தெருவில் பிச்சை எடுக்கும் அளவிற்கு வந்து விட்டோம்.
எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் சாப்பிடவேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் உடுத்த வேண்டுமோ அதையும் விடுத்து அடையாளங்களை, அறிவை, சொத்தை, மானத்தை எல்லாவற்றையும் இழந்த சமூகமாக இருக்கிறோம். ஆனாலும் சிறப்பான வாழ்நிலையை பெற்றுள்ளோம் என்கிற மாயையிலே வாழ்கிறோமே, இதைவிடக் கேவலம் எந்த நாட்டில் நடந்துவிடக்கூடும்??

குண்டடி பட்டு தினம் தினம் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாவதைக் காட்டிலும் இழிநிலையில் இருக்கிறோம். எதை எடுத்தாலும் கலப்படம். வாங்கும் எல்லா  பொருட்களும் இரண்டாம் அல்லது மூன்றாம் தரம், அல்லது தரமே இல்லை. அதைத் தட்டிக்கேட்கவும் யாரோ ஒரு முகம் தெரியாத ஹீரோ வரவேண்டி இருக்கிறது. ஏனெனில் முகம் தெரிந்த ஹீரோக்கள் துடைப்பதற்கு காகிதம் இல்லாமல் தவிக்கும் நிலையில், அவர்கள் நிஜ ஹீரோக்களாக ஆவது எதிர்பார்க்க முடியாது.

இத்தனைத் துயரத்திலும் நண்பர் திருமூர்த்தி அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது சிறந்த உதாரணமாகும். விவசாயத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு செய்து, அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புதுமை இல்லையென்றாலும், அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் மறுமொழிகளையும், அவருக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களையும் பார்க்கும்போது, "தம்மால் செய்யாமுடியாமல் பொருளாதார வலைப்பின்னலில் சிக்கி தவிக்கிரோமே!" என்று ஆதங்கப்படுவதாகவே தோன்றுகிறது.

நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமில்லாத கூக்குரல்கள் கேட்பதாகவும் தோன்றுகிறது. மாற்றம் வேண்டுவோர்... சும்மா இருந்துவிட்டால் நடக்குமா? என்ன செய்ய வேண்டும்? உங்கள் பங்கு என்ன? தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்...

நன்றி
உதயகுமார் ஸ்ரீ.

திங்கள், 22 ஜூன், 2015

எந்த வாலைப் பிடிப்பது?

என் குரலில் பதிவு செய்யப்பட்ட சிறுகதை. மனிதர் பற்றும் பற்றுகளைப் பற்றியது.

நன்றி
உதயகுமார் ஸ்ரீ

ஞாயிறு, 21 ஜூன், 2015

காற்று - புரட்சி!

அடிமையாய் இருப்பதில் உள்ள சுகம் என்னவென்று அடிமைகளுக்கு மட்டுமே தெரியும். ஏதோ ஒரு காலகட்டத்தில் எல்லோருமே அடிமையாய் இருந்திருப்போம். சிலருக்கு அதுவே பிடித்துப்போய்விட்டது. பலருக்கு பழகிவிட்டது.
சிலருக்கு மட்டுமே புழுக்கமாக இருக்கிறது. புழுக்கமாக உணருபவர்தான் காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும். காற்று உள்ளே வந்தவுடன், வசதியாக சிலர்மட்டும் அடிமை வேஷம் கலைக்க வருவார்கள். சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ சமத்துபிள்ளை என்றோ எப்படியாவது பெயர்சொல்லுங்கள். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அதுபோன்றவர்களை தடுக்கவும் வழியில்லை.

அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்த சுயநலவாதிகளுக்காக நம்முடைய உழைப்பு சென்றுவிடுமே என்று நினைத்து புழுக்கம் கொண்டவர்கள் காற்றை வரவைக்காமல் இருந்துவிட முடியாது.
காற்று, சுத்தமான காற்று, அதுவே இன்றைய கட்டாயத் தேவை!
புரட்சி மலரும்!

On Facebook! 

வியாழன், 11 ஜூன், 2015

குடும்பத்தலைவிகளின் குமுறல்

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு கேஸ்கள் "குடிக்கும் கணவனின் தொல்லைகள்" என்ற குற்றச்சாட்டோடு வந்துள்ளது. இதில் ஒரு பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும், மற்றொருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினர்.

இரண்டு பேருக்குமே சொந்த வீடு உள்ளது. சிறிய அளவில் கடனும் உள்ளது. சுமைகள் பெரிதாக இல்லாததனால் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து இப்போது குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் முழுவதும் குடிக்கே செலவு செய்யும் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மனைவிகள் இருவரும் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைசெய்து குடும்ப செலவையும் குழந்தைகளின் பள்ளி செலவையும் செய்து வருவதாக சொன்னார்கள். இதில் ஒரு பெண் என் வீட்டில் பணி செய்கிறார்.

தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்கு உரத்த குரல்கள் கேட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால் குடும்ப பெண்களின் பலத்த எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையுமாய் இன்மையுமாய்

“The opposite of a fact is a falsehood, but the opposite of one profound truth may very well be another profound truth.” நீல்ஸ் போர் (Neils Bohr) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

மாணிக்கவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் பத்தொன்பதாவது பாட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் யாரென்று அநேகமாக தெரிந்திருக்கும். நீல்ஸ் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியலாளர்.

நீல்ஸ் சொன்னதில் கவனிக்க வேண்டியது "One profound truth may very well be opposite of another profound truth." வாசகர் சொன்னது "உண்மையுமாய் இன்மையுமாய் விளங்கும் பரம்பொருள்."

வானில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்திற்கும் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள வெறுமை (vacuum) என்பதும், நாம் கண்ணால் காணும் அனைத்துமாக இருப்பது ஒரு பொருளே.

இருவரும் சொல்ல வந்தது நேரெதிராக இருக்கும் இரு கூற்றுகளும் உண்மையாக இருக்கும் நிலை. நேசம் உள்ள மனிதனிடத்தில கோபம் இருக்கும். கோபத்தில் கொலைகூட செய்வான், செய்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.

அறிவியல்பூர்வமாக அளவிட்டு நிரூபிக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இவ்வாறு முரண்பட்ட கருதுகோள்களை கொண்டிருக்கும்.
.
தொடரும்!