ஞாயிறு, 21 ஜூன், 2015

காற்று - புரட்சி!

அடிமையாய் இருப்பதில் உள்ள சுகம் என்னவென்று அடிமைகளுக்கு மட்டுமே தெரியும். ஏதோ ஒரு காலகட்டத்தில் எல்லோருமே அடிமையாய் இருந்திருப்போம். சிலருக்கு அதுவே பிடித்துப்போய்விட்டது. பலருக்கு பழகிவிட்டது.
சிலருக்கு மட்டுமே புழுக்கமாக இருக்கிறது. புழுக்கமாக உணருபவர்தான் காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும். காற்று உள்ளே வந்தவுடன், வசதியாக சிலர்மட்டும் அடிமை வேஷம் கலைக்க வருவார்கள். சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ சமத்துபிள்ளை என்றோ எப்படியாவது பெயர்சொல்லுங்கள். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அதுபோன்றவர்களை தடுக்கவும் வழியில்லை.

அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்த சுயநலவாதிகளுக்காக நம்முடைய உழைப்பு சென்றுவிடுமே என்று நினைத்து புழுக்கம் கொண்டவர்கள் காற்றை வரவைக்காமல் இருந்துவிட முடியாது.
காற்று, சுத்தமான காற்று, அதுவே இன்றைய கட்டாயத் தேவை!
புரட்சி மலரும்!

On Facebook! 

வியாழன், 11 ஜூன், 2015

குடும்பத்தலைவிகளின் குமுறல்

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு கேஸ்கள் "குடிக்கும் கணவனின் தொல்லைகள்" என்ற குற்றச்சாட்டோடு வந்துள்ளது. இதில் ஒரு பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும், மற்றொருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினர்.

இரண்டு பேருக்குமே சொந்த வீடு உள்ளது. சிறிய அளவில் கடனும் உள்ளது. சுமைகள் பெரிதாக இல்லாததனால் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து இப்போது குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் முழுவதும் குடிக்கே செலவு செய்யும் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மனைவிகள் இருவரும் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைசெய்து குடும்ப செலவையும் குழந்தைகளின் பள்ளி செலவையும் செய்து வருவதாக சொன்னார்கள். இதில் ஒரு பெண் என் வீட்டில் பணி செய்கிறார்.

தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்கு உரத்த குரல்கள் கேட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால் குடும்ப பெண்களின் பலத்த எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையுமாய் இன்மையுமாய்

“The opposite of a fact is a falsehood, but the opposite of one profound truth may very well be another profound truth.” நீல்ஸ் போர் (Neils Bohr) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

மாணிக்கவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் பத்தொன்பதாவது பாட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் யாரென்று அநேகமாக தெரிந்திருக்கும். நீல்ஸ் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியலாளர்.

நீல்ஸ் சொன்னதில் கவனிக்க வேண்டியது "One profound truth may very well be opposite of another profound truth." வாசகர் சொன்னது "உண்மையுமாய் இன்மையுமாய் விளங்கும் பரம்பொருள்."

வானில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்திற்கும் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள வெறுமை (vacuum) என்பதும், நாம் கண்ணால் காணும் அனைத்துமாக இருப்பது ஒரு பொருளே.

இருவரும் சொல்ல வந்தது நேரெதிராக இருக்கும் இரு கூற்றுகளும் உண்மையாக இருக்கும் நிலை. நேசம் உள்ள மனிதனிடத்தில கோபம் இருக்கும். கோபத்தில் கொலைகூட செய்வான், செய்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.

அறிவியல்பூர்வமாக அளவிட்டு நிரூபிக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இவ்வாறு முரண்பட்ட கருதுகோள்களை கொண்டிருக்கும்.
.
தொடரும்!

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெயமோகன்அவர்கள் சொல்லவருவது யாதெனில்!


ஜெயமோகன்அவர்கள் சொல்லவருவது யாதெனில்!
சீண்டுவது பற்றி

இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.

உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.

சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.

ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.

எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.

சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.

இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ஷோ பிஸினஸ்என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.

தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய விளம்பரத்தின்பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.

அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.

எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.

இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உலக இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ஸ்டண்ட்அடித்தவர்களே.

நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.

இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.

நாமிருக்கும் இடம்

எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது

ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.

நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.

அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.

செவ்வாய், 28 ஜூன், 2011

இந்திய மருத்துவமும் தாவரங்களும்

அமெரிக்காவின் தலைநகர் நியூ யார்க்கில் அமைந்துள்ள "Excelsior College" -இல் இயற்கை அறிவியல் துரையின் இயக்குனராக உள்ள டாக்டர். உஷா பழனிசுவாமி அவர்கள் இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் உபயோகித்துள்ள தாவரங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பினை American Society for Horticultural Science என்ற அமைப்பிற்காக தொகுத்துள்ளார். அதன் காணொளி கீழே...



இந்த தொகுப்பிலிருந்து ஒரு முக்கியமான தகவல் நமக்கு கிடைக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளின் அளவு வெறும் 2.5%. ஆனால் சீனா 15% ஏற்றுமதி செய்கிறது. ஒரு பெரிய வியாபாரத்தின்அழைப்பாகவே இதை நான் கருதுகிறேன். இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவெனில் மூலிகைகளை வெறுமனே செடிகளாக ஏற்றுமதி செய்வதா? அல்லது மதிப்பு கூட்டி பின்பு அந்த மதிப்பு கூட்டிய பொருளுக்கு உரிய காப்புரிமை பெற்று பின்பு ஏற்றுமதி செய்வதா?

எதுவானாலும் இயற்கை மருத்துவம் எதிர்கால பெருவியாபாரமாக ஆகப்போவது உறுதி.

Courtesy: http://www.ashs.org/db/horttalks/detail.lasso?id=899

வியாழன், 19 மே, 2011

வாத்தியார் பிள்ளை மக்கு!

நம் வீட்டின் அருகில் ஒரு வாத்தியார் குடியிருந்தால் நிச்சயம் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும். "நான் ஒரு ஸ்கூல்ல வாத்தியார். ஆனா என் பையன் நீ! இப்பிடி மக்கா இருக்கியேடா!" என்று. (வாத்தியார் பேச்சிலரா இருந்தா கூடவா? என்று குறுக்கு கேள்வியெல்லாம் கேக்கக்கூடாது!)

பிள்ளை பெற்றுக்கொள்வதில் இருந்து அவனை /அவளை டீன் ஏஜ் வரை வளர்ப்பது என்ற கடமையை (சிவனே/பெருமாளே/... என்று) ஏற்றுக்கொண்டு இந்தியத் தாய்மார்களும் தந்தைமார்களும் கஷ்டப்படுவதை நாள்தோறும் பார்க்கிறோம்!

ஒரு பிள்ளை பெற்றவன் என்ற முறையில் என்னை நானே சோதித்து பார்த்து கண்ட உண்மை ஒன்று, இல்லை இல்லை, என் கேள்விக்கு நானே கண்ட பதில். அது என்ன கேள்வி? சிறு வயதில் நான் செய்த சில தவறுகளுக்காக (தப்புகள் இல்லை) என் அப்பா என்னை தண்டிக்கும்போது, நான் அப்படி என்ன செய்யக்கூடாததை செய்துவிட்டேன்? என்ற கேள்வி மனதில் எழும், விழும். மறுபடி என்றாவது எழும். இந்தக் கேள்விக்கு விடை சொல்ல ஒரு அப்பரும் (அப்பனும்) தயாராய் இல்லை (நானே அப்பவாகிதான் இதை கண்டுபிடிக்கணும்னு இருக்கு!)

நான் வளரும்போது எண்ணங்களால் உந்தப்பட்டு என்னென்ன செய்தேனோ அதையே என் மகனும் செய்யும் போது என் தந்தையைப்போல் எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக, என் கேள்விகளுக்கு விடை தெரியும் காலம் வந்துவிட்டதாய் உணர்ந்தேன். என் தாய் கற்றுக்கொடுத்த நிதானம்தான் அதற்கு காரணம்.

தன்னைப்பற்றி அறிந்துகொள்ள கேட்கப்படும் நிறைய கேள்விகளுக்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும் என்ற உபரி உண்மையும் எனக்கு அப்போது தெளிவாகியது.

ஒரு உயிர் உருவாவதிலிருந்தே அதன் குணங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் (genes) என்று சொல்வார்களே, அது உருவாகும் நிமிடம், உருவாக்குபவர் என்ன மனநிலையில்/உடல்நிலையில் உள்ளார் என்பதை பொறுத்து அமையும்.

'முதல் இரவு' நடப்பதற்காக செய்யும் சாங்கியங்களில் (இன்று நடப்பதை சொல்லவில்லை, எவ்வாறு நடக்க வேண்டும் என்று எழுதிவைக்கப்பட்டதோ (யாரால்!), அவ்வாறான சாங்கியங்களில்) அதற்கான விளக்கங்களை நாம் அறிய முடியும்.

ஒரு மணப்பெண்ணையும் மாப்பிள்ளையையும் தயார் செய்யும் முறையில் மஞ்சள், சந்தானம், ஜவ்வாது, பன்னீர், சில பூக்கள், மற்றும் பல இயற்கை பொருட்களை வைத்து அலங்கரித்தப்பின்தான் அந்த முக்கியமான (!) வேலையை செய்யவேண்டும் என்று பெரியவர்கள் அரும்பாடு பட்டாலும் ஆரம்பத்திலிருந்தே நடப்பதெல்லாம் ஏடாகூடம்தான்.

இக்கணத்தில் எனக்கு தோன்றுவது "சொல்லித்தெரிவதுதான் மன்மதக்கலை". "காமசூத்ரா" எனும் இந்தியப்படம் ஒன்று! பார்த்தப்பின்தான் தெரிந்தது நம் நாட்டு கலாச்சாரம் எந்த அளவிற்கு நுண்ணியது என்று. இந்திய இலக்கியங்களில் பலவற்றிலும், குறிப்பாக அகநானூறில் சொல்லப்பட்ட கருத்துகளில் ஏராளமான அக சமாச்சாரங்கள் ஒளிந்துள்ளன.

குழந்தை பிறக்க ஏற்பாடு செய்வதிலிருந்து அதைப்பெற்றுக்கொண்டு பேணி(!) வளர்த்து சமுதாயத்திற்கு ஒரு நல்ல பிள்ளையை உருவாகுவது இன்றைய அவசரகால வாழ்க்கை முறையில் காலவதியாகிவிட்டது.

ஒவ்வொரு குழந்தையும் பிறந்ததிலிருந்து தன்னுடைய தேடலை/கற்றலை ஆரம்பித்துவிடுகிறது. எங்கிருந்து? அதன் கண்முன் நடக்கும் அத்தனையும் பார்த்து, காதார கேட்கும் எல்லாவற்றிலுமிருந்து!

பிறந்தவுடன் அனேக(!) குழந்தைகளுக்கு வீடுதான் உலகம். அந்த உலகத்தில் ஆரம்பமாகும் கல்வி தொடர்ந்து தான் சந்திக்கின்ற எல்லா மனிதர்களின் ஊடே பயணித்து தன் வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்கிறது. பெற்றோர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், என்ன படிப்பு படித்திருந்தாலும், எந்த அந்தஸ்தில் இருந்தாலும் தன குழந்தையின் முதல் கல்விக்கு அவர்களே பொறுப்பு.

வாத்தியார் பள்ளியில் மட்டும் வாத்தியாராய் (!) இருக்காமல் வீட்டிலும் அதே நினைப்போடு வாத்தியார்(?) தொழில் செய்வதனால்தான் அவர் பிள்ளை மக்காய் வளர்கிறது. கண்டிப்பு என்ற சொல்லிற்கு இன்னும் நம் பெற்றோர்கள்/ஆசிரியர்கள் சரியான அர்த்தத்தையோ விளக்கத்தையோ புரிந்துகொள்ளவில்லை.

சரியான கல்வி மட்டுமே ஒருவனின்/ஒருத்தியின் நிஜ வாழ்க்கை (அதாவது தாமே முடிவுகளை எடுத்து செயல்படுத்தி வாழ்வது) எப்படி அமையும் என்பதை தீர்மானிக்கிறது.

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என் பணிவான வேண்டுகோள். பிள்ளைகளை, உலகம் என்னவென்று அறிந்துகொள்ளச்செய்யுங்கள். அதற்கு முன்னால் நீங்கள் யார் என்பதை சிறிதளவேனும் அறிந்துகொள்ளுங்கள். உங்களின் பிம்பம்தான் பிள்ளைகள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். நாம் சரியான பாதையில் நடைபோட்டால் நம் பின்னே வரும் பிள்ளைகள் சரியான பாதையில்தான் வருவார்கள் என்பதில் ஐயமில்லை.

சனி, 8 ஜனவரி, 2011