வியாழன், 23 ஜூலை, 2015

எனக்கும் அது நடந்தது...

தொலைக்காட்சியில் புதுமுகங்களின் அறிமுக பேட்டியில் சொல்வதுபோல, எனக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஒரு விபத்துதான்.

ஊருக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கையில் நண்பரிடம் இருந்து ஒரு அழைப்பு. அடுத்த இரண்டு நாட்கள் நீங்கள் சென்னையில் இருப்பீர்களா? ஆமாம் என்றேன். உங்கள் கோட்-சூட்டை எடுத்துக்கொண்டு சொல்லுமிடத்திற்கு வந்துவிடுங்கள். "...........".

அடுத்த நாள் காலையில் 6 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று உத்தரவு. அப்படியே சென்றேன். நீண்ட பிரயாணத்திற்கு பிறகு ஒரு கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல விருந்து கொடுத்து காக்க வைத்தனர். அப்புறம் என்ன? வழக்கம்போல மர்மம் தொடர நாங்கள் காத்திருந்த இடத்தை நடிகர் ரியாஸ் கான் கடந்துசெல்ல, பரபரப்பு தொற்றிக்கொண்டது.

சினிமாவில் நடிக்க வேண்டும். கதை சொல்லப்பட்டது. அப்புறம் திடீரென்று அழைப்பு. இயக்குனரின் அழைப்புதான்!!!

சென்று விட்டு அந்த வேகின்ற வெயிலில் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே எங்கு உட்காரவேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கப்பட்டது. வெகுசிறிது நேரத்திற்குள் அங்கு ஒரு வெள்ளைக்காரி என்னை நோக்கி வர, அடடா..என்ன நடக்கிறது? என்று என்னை நானே கேட்டுக்கொள்ள, என்னருகில் இருந்தவரை தள்ளி உட்காரசொல்லிவிட்டு, அந்த வெள்ளைக்காரியை என்னருகில் அமரசெய்தார்கள். அவர் கனடா நாட்டு நடிகை அலியோனா. இருபது படங்களில் (கனடா நாட்டு) நடித்தவராம். அவரே சொன்னார்.

செல்ஃபி எடுத்துக்கொள்ளவா என்றெல்லாம் அனுமதி கேட்காமல், அவர் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கும்போது நானே க்ளிக்கிவிட்டேன்!

புறப்படும்போது ரியாஸ் கான் அவர்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன். இப்போதைக்கு இது மட்டுமே சொல்ல முடியும் என்பதால்... மேலும் தகவல்கள் சிறிது காலத்திற்குப் பின்.

செவ்வாய், 23 ஜூன், 2015

சாப்பாடு - பெரும்பாடு

உயிர்வாழ அத்தியாவசியத் தேவையான உணவை யாரும் இங்கே வெறுப்பதில்லை. ஆனாலும் விவசாயியை நாம் மனதளவில் உயர்வாக நினைத்தாலும், சமூக அந்தஸ்து என்று வரும்போது குறைத்தே மதிப்பிடுகிறோம். காரணம் சாதாரண விவசாயியின் தோற்றமும் அவர் சம்பாதனையும் மற்றவர்களைக் காட்டிலும் தாழ்ந்தே இருக்கிறது.

வேலை சார்ந்து உருவான இந்திய சமூகக் கட்டமைப்பை "புதுமை" பேசுகிறேன் என்று சொல்லி அதன் அடிவேரில் அமிலத்தை ஊற்றியவர்கள், இறந்தபின்னும், தங்கள் வாரிசாக சில அமில ஆலைகளை உருவாக்கிவிட்டு சென்றுவிட்டனர். மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து எனும் இவைதான் அடிப்படை தொழில்களாக பாவிக்கப்பட்டன. அதன் பொருட்டே சமூக கட்டமைப்பும் உருவானது.

இன்று எல்லோருக்கும் கல்வி என்கிற பெயரில் குப்பைத் தகவல்களை மட்டும் குழந்தைகளின் மூளையில் நிரப்பும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. வாழ்க்கைக்கல்வி என்றால் என்ன, நடைமுறை அறிவு என்றால் என்ன என்று சிறு துளி அளவு கூட மாணவர்களுக்கு..., ஏன், இன்று பெருநிறுவனங்களில் வேலை செய்து பெரிதாக பணம் பண்ணுகிறோம் என்று பீத்திக்கொள்பவர்களுக்குக் கூடத்தெரியாது.

சம்பாதிக்க மட்டுமே அறிவு இங்கே தரப்படுகிறது. அது பாதி அறிவுதான்.செலவு செய்வது எப்படி? எந்தப் பொருளை எந்த இடத்தில, எந்த நேரத்தில் வாங்கவேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடும் இன்றி, சேமிப்பு என்றால் என்னவென்றே தெரியாத மலட்டு சமுதாயத்தை உருவாக்கிய கல்வியைத்தான் இன்று எல்லோரும் நாடிச்சென்று, நடவு செய்த பூமியை விற்று, ஏமாந்து, தெருவில் பிச்சை எடுக்கும் அளவிற்கு வந்து விட்டோம்.
எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் சாப்பிடவேண்டுமோ அதை விடுத்து, எதையெல்லாம் உடுத்த வேண்டுமோ அதையும் விடுத்து அடையாளங்களை, அறிவை, சொத்தை, மானத்தை எல்லாவற்றையும் இழந்த சமூகமாக இருக்கிறோம். ஆனாலும் சிறப்பான வாழ்நிலையை பெற்றுள்ளோம் என்கிற மாயையிலே வாழ்கிறோமே, இதைவிடக் கேவலம் எந்த நாட்டில் நடந்துவிடக்கூடும்??

குண்டடி பட்டு தினம் தினம் தீவிரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு பலியாவதைக் காட்டிலும் இழிநிலையில் இருக்கிறோம். எதை எடுத்தாலும் கலப்படம். வாங்கும் எல்லா  பொருட்களும் இரண்டாம் அல்லது மூன்றாம் தரம், அல்லது தரமே இல்லை. அதைத் தட்டிக்கேட்கவும் யாரோ ஒரு முகம் தெரியாத ஹீரோ வரவேண்டி இருக்கிறது. ஏனெனில் முகம் தெரிந்த ஹீரோக்கள் துடைப்பதற்கு காகிதம் இல்லாமல் தவிக்கும் நிலையில், அவர்கள் நிஜ ஹீரோக்களாக ஆவது எதிர்பார்க்க முடியாது.

இத்தனைத் துயரத்திலும் நண்பர் திருமூர்த்தி அவர்களைப் பற்றி இங்கு குறிப்பிடுவது சிறந்த உதாரணமாகும். விவசாயத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு செய்து, அதை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் எதுவும் புதுமை இல்லையென்றாலும், அவருக்குக் கிடைக்கும் பாராட்டுகளையும் மறுமொழிகளையும், அவருக்கு ஊக்கம் கொடுக்கும் நபர்களையும் பார்க்கும்போது, "தம்மால் செய்யாமுடியாமல் பொருளாதார வலைப்பின்னலில் சிக்கி தவிக்கிரோமே!" என்று ஆதங்கப்படுவதாகவே தோன்றுகிறது.

நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து காத்து இருக்கிறோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று சத்தமில்லாத கூக்குரல்கள் கேட்பதாகவும் தோன்றுகிறது. மாற்றம் வேண்டுவோர்... சும்மா இருந்துவிட்டால் நடக்குமா? என்ன செய்ய வேண்டும்? உங்கள் பங்கு என்ன? தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்...

நன்றி
உதயகுமார் ஸ்ரீ.

திங்கள், 22 ஜூன், 2015

எந்த வாலைப் பிடிப்பது?

என் குரலில் பதிவு செய்யப்பட்ட சிறுகதை. மனிதர் பற்றும் பற்றுகளைப் பற்றியது.

நன்றி
உதயகுமார் ஸ்ரீ

ஞாயிறு, 21 ஜூன், 2015

காற்று - புரட்சி!

அடிமையாய் இருப்பதில் உள்ள சுகம் என்னவென்று அடிமைகளுக்கு மட்டுமே தெரியும். ஏதோ ஒரு காலகட்டத்தில் எல்லோருமே அடிமையாய் இருந்திருப்போம். சிலருக்கு அதுவே பிடித்துப்போய்விட்டது. பலருக்கு பழகிவிட்டது.
சிலருக்கு மட்டுமே புழுக்கமாக இருக்கிறது. புழுக்கமாக உணருபவர்தான் காற்றை உள்ளே கொண்டுவரவேண்டும். காற்று உள்ளே வந்தவுடன், வசதியாக சிலர்மட்டும் அடிமை வேஷம் கலைக்க வருவார்கள். சுயநலவாதிகள் என்றோ சந்தர்ப்பவாதிகள் என்றோ சமத்துபிள்ளை என்றோ எப்படியாவது பெயர்சொல்லுங்கள். அதைப்பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை. அதுபோன்றவர்களை தடுக்கவும் வழியில்லை.

அவர்களை மனதில் வைத்துக்கொண்டு, இந்த சுயநலவாதிகளுக்காக நம்முடைய உழைப்பு சென்றுவிடுமே என்று நினைத்து புழுக்கம் கொண்டவர்கள் காற்றை வரவைக்காமல் இருந்துவிட முடியாது.
காற்று, சுத்தமான காற்று, அதுவே இன்றைய கட்டாயத் தேவை!
புரட்சி மலரும்!

On Facebook! 

வியாழன், 11 ஜூன், 2015

குடும்பத்தலைவிகளின் குமுறல்

கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இரண்டு கேஸ்கள் "குடிக்கும் கணவனின் தொல்லைகள்" என்ற குற்றச்சாட்டோடு வந்துள்ளது. இதில் ஒரு பெண் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும், மற்றொருவர் என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினர்.

இரண்டு பேருக்குமே சொந்த வீடு உள்ளது. சிறிய அளவில் கடனும் உள்ளது. சுமைகள் பெரிதாக இல்லாததனால் சிறிய அளவில் குடிக்க ஆரம்பித்து இப்போது குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் முழுவதும் குடிக்கே செலவு செய்யும் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மனைவிகள் இருவரும் பக்கத்தில் உள்ள வீடுகளில் வீட்டு வேலைசெய்து குடும்ப செலவையும் குழந்தைகளின் பள்ளி செலவையும் செய்து வருவதாக சொன்னார்கள். இதில் ஒரு பெண் என் வீட்டில் பணி செய்கிறார்.

தமிழ்நாட்டில் மது ஒழிப்புக்கு உரத்த குரல்கள் கேட்டாக வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதித்தால் குடும்ப பெண்களின் பலத்த எதிர்ப்புக்கு தமிழக அரசு ஆளாகும் என்பதில் சந்தேகமில்லை.

உண்மையுமாய் இன்மையுமாய்

“The opposite of a fact is a falsehood, but the opposite of one profound truth may very well be another profound truth.” நீல்ஸ் போர் (Neils Bohr) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே

மாணிக்கவாசகர் தன்னுடைய திருவாசகத்தில் பத்தொன்பதாவது பாட்டில் இவ்வாறு குறிப்பிடுகிறார். மாணிக்கவாசகர் யாரென்று அநேகமாக தெரிந்திருக்கும். நீல்ஸ் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இயற்பியலாளர்.

நீல்ஸ் சொன்னதில் கவனிக்க வேண்டியது "One profound truth may very well be opposite of another profound truth." வாசகர் சொன்னது "உண்மையுமாய் இன்மையுமாய் விளங்கும் பரம்பொருள்."

வானில் உள்ள ஆயில்ய நட்சத்திரத்திற்கும் அஸ்வினி நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள வெறுமை (vacuum) என்பதும், நாம் கண்ணால் காணும் அனைத்துமாக இருப்பது ஒரு பொருளே.

இருவரும் சொல்ல வந்தது நேரெதிராக இருக்கும் இரு கூற்றுகளும் உண்மையாக இருக்கும் நிலை. நேசம் உள்ள மனிதனிடத்தில கோபம் இருக்கும். கோபத்தில் கொலைகூட செய்வான், செய்துவிட்டு தேம்பித்தேம்பி அழுவான்.

அறிவியல்பூர்வமாக அளவிட்டு நிரூபிக்க முடியாத விஷயங்கள் மட்டுமே இவ்வாறு முரண்பட்ட கருதுகோள்களை கொண்டிருக்கும்.
.
தொடரும்!

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஜெயமோகன்அவர்கள் சொல்லவருவது யாதெனில்!


ஜெயமோகன்அவர்கள் சொல்லவருவது யாதெனில்!
சீண்டுவது பற்றி

இத்தகைய விவாதங்களைப்பற்றி பொதுவாகவே ஒரு புகார் சொல்லப்படுகிறது. இதிலுள்ள சீண்டும் அம்சம், கவன ஈர்ப்பு அம்சம் பற்றி. இதைப்பற்றி நான் மீண்டும் மீண்டும் பதில்சொல்லியிருக்கிறேன். இப்போது மீண்டும்.

உலக இலக்கிய வரலற்றில் தன் சமகாலச் சிந்தனைச் சூழலை சீண்டாத, விவாதத்துக்கு இழுக்காத முக்கியமான படைப்பாளிகள் அனேகமாக எவரும் கிடையாது. இலக்கியப்படைப்பாளிகள் அதனூடாக எப்போதுமே சர்ச்சைக்கு காரணமாகிறார்கள். தல்ஸ்தோய் முதல் லோஸா வரை, புதுமைப்பித்தன் முதல் ஜெயகாந்தன் வரை இதுதான் வரலாறு. இதில் சிறைசென்றவர்கள் உண்டு- டி.எச்.லாரன்ஸ் போல. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் உண்டு- லூகி பிரண்டல்லோ போல.

சமகாலத்தின் சிந்தனை வரட்சியை, அறவீழ்ச்சியை, போலி ஒழுக்கத்தை சுட்டிக்காட்டுவது எப்போதுமே எழுத்தாளனின் கடமை. உண்மையில் அது பற்றிய கவலைகளும் ஒவ்வாமைகளுமே அவனை எழுதச்செய்கின்றன. அவ்வாறன்றி சமகாலத்தின் பொதுமக்களின் உணர்ச்சிகளுடனும் சிந்தனைகளுடனும் தானும் இணைந்திருக்கக்கூடிய எழுத்தாளன் எதையும் உருப்படியாக எழுத முடியாது.

ஆகவேதான் சமூக- பண்பாட்டு விமர்சனம் இல்லாமல் நவீனஇலக்கியம் இருக்கமுடியாது என்று சொல்லப்படுகிறது. அந்த விமர்சனம் சமகாலச்சமூகத்தை தொந்தரவு செய்யும். அமைதியிழக்கச் செய்யும். பிரச்சினைகளுக்கு உள்ளாக்கும். அதற்கான எதிர்வினையை சமூகம் அளிக்கும். வசைபாடும், நகையாடும். ஆனால் அதனூடாகவே எழுத்தாளன் சமூகத்திடம் பேசுகிறான். ஆகவே என்னைப்பொறுத்தவரை இது என் பணி. இதை நான் செய்யாமலிருக்கமுடியாது.

எழுத்தாளர்கள் சர்ச்சையை உருவாக்கக் கூடாது, சமகாலத்தை விமர்சிக்கக்கூடாது, கருத்துக்களை முன்வைக்கக்கூடாது என்று சொல்லக்கூடியவர்கள் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாத ஒருவகை பாமரர்கள். அவர்களின் எண்ணிக்கைக்கு இங்கே குறைவே இல்லை. அவர்கள் மனதில் எழுத்தாளனுக்கு இடமே இல்லை. அவன் அவர்கள் நோக்கில் ஒருவகை கேளிக்கையாளன் மட்டுமே. ஆகவே தங்கள் சிந்தனைத்தேக்கத்தைச் சுட்டிக்காட்டுகையில் திகைப்பும் எரிச்சலும் கொள்கிறார்கள்.

சென்ற இருதினங்களில் எனக்கு ஓர் எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்ற உபதேசங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்தன. இக்கட்டுரைகளுக்கான பின்னூட்டங்களைப்பார்த்தால் அதிலுள்ள எரிச்சலும் வசையும் பொதுவாகவே எழுத்தாளர் என்ற ஆளுமைக்கே எதிரானவை என்பதை எவரும் காணமுடியும். எழுத்தாளர்கள் சமூகத்தின் நல்லெண்ணத்தை ஈட்டவேண்டியவர்கள் என்ற தோரணையே நம்மவர்களிடம் எப்போதும் உள்ளது.

இன்னொரு குரல் இது விளம்பரத்துக்காகச் செய்யப்படுவது என்பது. இதைச்சொல்பவர்களை கூர்ந்து கவனியுங்கள், இவர்களுக்கும் இலக்கியமென்றால் என்னவென்றே தெரியாது. இலக்கியம் ஒருவகையான ஷோ பிஸினஸ்என்றுதான் அறிந்து வைத்திருக்கிறார்கள். விளம்பரம் என்பது அங்கே இருந்து இவர்கள் பெற்றுக்கொண்டிருக்கும் வார்த்தை. இவர்கள் உள்ளூர ஏங்குவது, இவர்கள் செயல்படுவது அந்த விளம்பரத்துக்காக மட்டுமே.

தமிழக இலக்கியச் சூழலில் அத்தகைய விளம்பரத்தின்பலன் என ஏதுமில்லை. அதனால் பணம் என ஏதும் கிடைக்கப்போவதில்லை. புகழுக்குப்பதில் வசைகளும் எக்காளங்களும் மிரட்டல்களுமே கிடைக்கும். அது இவர்களுக்கும் நன்றாகவே தெரியும், ஆகவேதான் இவர்கள் ஒருபோதும் இந்த வழியைத் தேர்வுசெய்வதில்லை. சமகாலச் சமூகத்தின் பொதுமனநிலைகளுக்கு எதிராக நின்று பேசுவதற்கு அதற்கான திடசிந்தனையும் ஆன்மவல்லமையும் தேவை.

அப்படி ஓர் ஆளுமையை தனக்கென உருவாக்கிக் கொண்டவர்களை மட்டுமே அச்சமூகம் கவனிக்கும். அவன் கருத்து மட்டுமே விவாதங்களை எழுப்பும் உண்மையில் இந்த எதிர்வினைகள் எல்லாமே அதைச் சொல்பவனின் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பின் மறுபக்கங்கள்தான். அவன் குரல் கவனிக்கப்படுகிறதென்றே அதற்குப்பொருள். இந்தக் கவனத்தை வெறும் விளம்பரம் என்பவர்கள் கவனத்தைக் கவர்வதற்கான என்னென்ன அந்தர்பல்டிகளெல்லாம் அடிக்கிறார்கள் என்று கவனியுங்கள், அதை இச்சமூகம் எப்படி சாதாரணமாகக் கடந்து செல்கிறதென்பதை அறிவீர்கள்.

எனக்கு ஏதாவது இச்சமூகத்திடம் சொல்வதற்கிருப்பது வரை, நான் இச்சமூகத்தை கவனிக்கச்செய்து நான் சொல்வதை முன்வைத்தபடியேதான் இருப்பேன். அது விவாதங்களை உருவாக்கியபடியேதான் இருக்கும். எந்த எதிர்வினையும் இல்லாமல்போவதே எழுத்தாளனின் தோல்வி.

இது விளம்பரத்துக்கான உத்தி என்றால் தல்ஸ்தோய் சமகால ஒழுக்கச்சூழலை கடுமையாக விமர்சித்ததும் இருட்டின் வெற்றி போன்ற நாடகத்தை எழுதியதும் அதன் எதிர்வினைகளும் எல்லாமே வெறும் விளம்பரங்களே. டி.எச்.லாரன்ஸின் கட்டுரைகளும் விவாதங்களும் வெறும் பரபரப்புதேடல்களே.உலக இலக்கியத்தின் அத்தனை முன்னோடிகளும் விளம்பரத்துக்கான ஸ்டண்ட்அடித்தவர்களே.

நான் முன்னோடிகளாகக் கொள்ளும் அத்தனை சிந்தனையாளர்களும் இதைசெய்தவர்களே. செய்துகொண்டிருப்பவர்களே.இப்போதுகூட பால் சகரியா கேரளச் சமூகத்தில் உருவாக்கும் நேரடியான பாதிப்பை என்னால் உருவாக்கமுடியவில்லை என்றே உணர்கிறேன்.

இலக்கியவரலாற்றை அறியாத, இலக்கியவாதியின் பணியை உணரமுடியாத பாமரர்களின் பிதற்றலை நான் கணக்கில் கொள்ளவில்லை. இலக்கியத்திற்குள் நுழையவிருக்கும் வாசகர்கள், எழுதப்போகும் படைப்பாளிகளுக்காகவே இதை எழுதுகிறேன்.நீங்கள் காண்பது இணையமெங்கும் அச்சு ஊடகமெங்கும் விரவிக்கிடக்கும் வசைகளை. ஆனால் என்றும் எப்போதும் நல்ல இலக்கியவாதி அவ்வாறான எதிர்வினைகள் வழியாகவேதான் செயல்பட்டான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் அந்த வசைகளுக்காக முயலுங்கள்.

நாமிருக்கும் இடம்

எதிர்வினைகள் நான் எதிர்பார்த்தவகையிலேயே இருந்தன என்றேன். நான் இந்தியாவில் தனிமனிதசிந்தனை- பகுத்தறிவு- ஜனநாயகம் உருவாகவே இல்லை என்று சொல்லிவருவதற்கான அழுத்தமான ஆதாரங்கள் இந்த எதிர்வினைகள். இனி எவருமே அப்படி இல்லை என என்னிடம் விவாதிக்கமுடியாது

ஆனால் இது எனக்கு அச்சத்தையும் ஆழமான வருத்ததையுமே அளிக்கிறது. மத்தியகாலகட்டத்தில் மதவாதிகளை எதிர்கொண்ட பகுத்தறிவாளனின் தனிமையை உணரமுடிகிறது என்னால்.

நாம் இன்னும் பதினெட்டாம்நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த சிந்தனைமாற்றங்களைக்கூட அடையாத சமூகமாகவே உள்ளோம். இன்னும் கருத்துக்களை புறவயமாக யோசிக்க, தர்க்கபூர்வமாக விவாதிக்க, நிதானமாக எல்லா தரப்புக்களையும் பரிசீலிக்க நாம் பழகவில்லை. இன்னும் சிந்தனையில் தனிமனிதனுக்குள்ள உரிமையை நாம் புரிந்துகொள்ளவில்லை. எந்த ஒரு கருத்தும் தயக்கமில்லாமல் முன்வைக்கப்படும் சூழலை உருவாக்காமல் சிந்தனையை வளர்க்க முடியாது என்று நாம் கற்கவில்லை. ஆம், நாம் பகுத்தறிவை நோக்கிய முதல் காலடியைக்கூட எடுத்து வைக்கவில்லை.

அதை நமக்கு நாமே பொட்டிலறைந்தாற்போல தெளிவுபடுத்தவே அக்கட்டுரை எழுதப்பட்டது.இப்போது அது தெளிவாகிவிட்டது. நாம் இங்கிருந்துதான் மேலே சிந்திக்க ஆரம்பிக்கவேண்டும்.